சங்ககிரி வட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணினியில் பிறப்பு, இறப்பு, அடங்கல் ஆகிய ஆவணங்களை பதிவு செய்வது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வருவாய் கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகன் தலைமை வகித்து, சங்ககிரி வட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பிறப்பு, இறப்பு, அடங்கல் ஆகியவைகளை கணினியில் பதிவு செய்து பயனாளிகளுக்கு வழங்குவது குறித்து பயிற்சி அளித்தார். இதில் தலைமையிடத்து வட்டாட்சியர் ஜெயக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் சிவராஜ், சங்ககிரி வட்டத்தில் உள்ள 36 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.