லஞ்ச வழக்கு: மேக்னசைட் நிறுவன உதவி மேலாளருக்கு 3 ஆண்டு சிறை
சேலத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மேக்னசைட் நிறுவன உதவி மேலாளருக்கு
சேலத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மேக்னசைட் நிறுவன உதவி மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சேலத்தில் உள்ள தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் (டான்மாக்) உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தவர் பாலு (44).
இந் நிறுவனத்தில் ஏற்காடு மலை அடிவாரத்தில் வெள்ளைக்கல் தரம் பிரிக்கும் பணியை ஒப்பந்ததாரர் சங்கர் என்பவர் செய்து வந்தார். இந்த நிலையில், ஒப்பந்ததாரர், கடந்த 2009 இல் வெள்ளைக்கல் தரம் பிரிக்கும் பணியை செய்து முடித்ததற்காக ரூ.5.47 லட்சம் தொகையை விடுவிக்குமாறு உதவி மேலாளர் பாலுவை அணுகினார். ஆனால், பணிக்கான தொகையை விடுவிக்க உதவி மேலாளர் பாலு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக சங்கர், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில், உதவி மேலாளர் பாலு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு பெறும்போது, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்தநிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், மேக்னசைட் நிறுவன உதவி மேலாளர் பாலுவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.