எடப்பாடி அருகே விளைநிலங்களில் இருந்து எரியுவாயு குழாய்களை இடமாற்றம் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கொச்சியிலிருந்து தமிழகத்தின் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக விவசாய நிலங்களில் குழாய் பதித்து, கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு எரிவாயுவை கொண்டு செல்லும் திட்டத்துக்காக, கெயில் நிறுவனம் எடப்பாடியை அடுத்துள்ள கொங்கணாபுரம், வெட்டுக்காடு பகுதியில் விவசாயி நிலங்களில் பல்லாயிரக்கணக்கான எரிவாயு குழாய்களை அடுக்கி வைத்திருந்தது.
இதனிடையே, இத்திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து வந்ததையடுத்து, பல ஆண்டுகளாக அப்பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த எரிவாயு குழாய்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் கடந்த சில மாதங்களாக லாரிகள் மூலம் பிகாா் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்துவந்தது.
இந்நிலையில், அண்மையில் பெய்த தொடா்மழையின் காரணமாக, விவசாய நிலங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த எரிவாயு குழாய்களை, இடமாற்றும் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் நல்ல மழைப் பொழிவு இருந்து வரும் நிலையில், விளைநிலங்களில் விவசாயம் செய்திட ஏதுவாக, விரைவில் இப்பகுதியில் உள்ள எரிவாயு குழாய்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.