கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் ரூ.60 லட்சத்தில் அரசு மருத்துவமனை கட்டடப் பணி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சமுத்திரம் கிராமப் பகுதியில் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம், அக்கிராம மக்கள் தங்கள் கிராமப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, அப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட தமிழக அரசு அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்தது.
அதைத் தொடர்ந்து, அப் பகுதியில் ரூ.60 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், அட்மா திட்டக்குழுத் தலைவர் கரட்டூர் மணி கட்டடப் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர்
பங்கேற்றனர்.