திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மேட்டூர் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஆர்.மோகன் குமாரமங்கலம் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக ஆர்.மோகன் குமாரமங்கலம் தெரிவு செய்யப்பட்டார். இந் நிலையில், திங்கள்கிழமை சேலத்துக்கு வந்த அவருக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை, ஆனந்த பாலம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார்.
இதில் மாநகர் மாவட்ட துணைத் தலைவர் பிரபு, வெங்கடேஷ், மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் முருகேசன், ஜெயராமன், ரகுராஜன், மேற்கு மாவட்டத் தலைவர் ஆர்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் மோகன் குமாரமங்கலம் செய்தியாளர்களிடம் கூறியது: மத்தியில் ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் தொழில் வளம் எதுவும் பெருகவில்லை. இதனால் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவும் இல்லை. மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத காரணத்தால் கிராமப் பஞ்சாயத்துகளில் எந்த வளர்ச்சிப் பணியும் நடக்கவில்லை.
மேட்டூர் உபரி நீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திமுக- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மேட்டூர் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றார்.