கெங்கவல்லி அருகே லத்துவாடியில் செம்பியம்மன் தேர்த் திருவிழா புதன்கிழமை நிறைவுபெற்றது.
லத்துவாடியில் உள்ள பொன் மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ளது செம்பியம்மன் கோயில். இக்கோயிலின் தேர்த் திருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இரவு தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார்.
இந்நிலையில், செம்பியம்மன் சுவாமி தேர்த் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். முக்கிய வீதிகளில் சென்ற தேர் பிற்பகல் நிலை நின்றது. கெங்கவல்லி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். புதன்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவுற்றது.