சேலம் - நாமக்கல் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கைது: ரூ.3.50 லட்சம் பறிமுதல்
சேலம் - நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் லஞ்சம் வாங்கி வந்த சேலம் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கனகராஜ் நள்ளிரவில் சிக்கினார்.
சேலம் - நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் லஞ்சம் வாங்கி வந்த சேலம் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கனகராஜ் நள்ளிரவில் சிக்கினார்.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் பேரூராட்சி உதவி இயக்குநராக பணியாற்றி வந்தவர் கனகராஜ் ( 57). கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர். இவர் சேலம் -நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 53 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் சிலரிடம் குடிநீர் பராமரிப்பு மற்றும் தெருவிளக்குகள் பராமரிப்பு, துப்புரவு பணி தொடர்பான ரசீதுகளை பாஸ் செய்வதற்கு 10 சதவீதம் கமிஷன் பெற்று வந்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் பலர் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸார் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கனகராஜை சில நாள்கள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் வெள்ளி மாலை அதிகாரி கனகராஜ் லஞ்சப் பணத்தை எடுத்துக்கொண்டு கோவையில் உள்ள அவரது இல்லத்திற்கு அலுவலக காரில் செல்வதாக சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கனகராஜை கண்காணித்து வந்தனர். லஞ்ச பணத்துடன் காரில் ஏறிய கனகராஜ் சேலம் அரியானூர் பக்கம் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரை மறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ. 3.50 லட்சம் லஞ்சப் பணம் இருந்தது. இந்தப் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அதிகாரிகள் சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு கனகராஜை அழைத்து வந்து விசாரித்தனர். அதிகாரி கனகராஜ் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சேலத்தில் அடுத்தடுத்து லஞ்ச வழக்கில் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.