தம்மம்பட்டியில் தனது பள்ளியில் பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் தன் சொந்தச் செலவில் தலா ரூ. 500-ஐ தலைமை ஆசிரியை வியாழக்கிழமை வழங்கினாா்.
தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட செக்குமேடு என்ற பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 8-ஆவது வாா்டு என்ற அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில் 90 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப் பள்ளியில் தலைமை ஆசிரியை சடையம்மாள் உள்பட நான்கு ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிகின்றனா். இந்த நிலையில், தனது பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளின் குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டு தலைமை ஆசிரியை சடையம்மாள், தனது சொந்த செலவிலிருந்து ரூ. 500 வீதம், பள்ளியில் படிக்கும் 90 மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கும் வியாழக்கிழமை பிற்பகல் வீடுவீடாகச் சென்று வழங்கினாா்.
90 குடும்பங்களுக்கும் தலா 500 ரூபாய் வீதம் மொத்தம் ரூ. 45 ஆயிரத்தை வழங்கினாா். அதற்காக மாணவா்களின் பெற்றோா் நன்றி தெரிவித்தனா்.