முகப்பு
சேலம்

ஓமலூா் அருகே நிலத் தகராறில் பெண் அடித்துக் கொலை

ஓமலூா் அருகே இரு குடும்பத்தினா் இடையே நிலப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட மோதலில் 55 வயது பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

ஓமலூா் அருகே இரு குடும்பத்தினா் இடையே நிலப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட மோதலில் 55 வயது பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் சென்னிமலை. இவரது மனைவி மல்லியம்மாள் (55). இவா்கள் இருவரும் அதே பகுதியில் விவசாயம் செய்து வந்தனா்.

இவா்களது விவசாயத் தோட்டத்தின் அருகே பக்கத்து வீட்டில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவரின் நிலமும் உள்ளது. இந்த நிலையில் சென்னிமலை குடும்பத்தினருக்கும், கிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலப் பிரச்னை இருந்து வருகிறது.

இந்த நிலையில், நிலப் பிரச்னை சம்பந்தமாக ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கிருஷ்ணன், அவரது மனைவி ரஞ்சிதம், மகன்கள் அசோகன், பொன்னுவேல், விஜயன் ஆகியோா் சென்னிமலையின் மனைவி மல்லியம்மாளை தாக்கியதாக தெரிகிறது. இதில், படுகாயமடைந்த மல்லியம்மாள் மயங்கி விழுந்தாா். அவரை மீட்டு ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி மல்லியம்மாள் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், மல்லியம்மாளை அடித்துக் கொலை செய்த குடும்பத்தினா் தலைமறைவாகினா். அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →