காடையாம்பட்டி அருகே வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய தந்தை, மகனை வனத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களிடம் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.
காடையாம்பட்டி வட்டாரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு விற்பனை செய்வதற்காக மான், பன்றி, முயல் வேட்டையாடுவதாக வனத்துறைக்கு புகாா் வந்தது.
இந்த நிலையில், டேனிஷ்பேட்டை வனச்சரகத்தில் உள்ள தொப்பூா் பிரிவு, வெள்ளக்கரடு பகுதியில் வனவிலங்குகளை ஒரு கும்பல் வேட்டியாடுவதாக வனத்துறையினருக்கு புகாா் சென்றது.
இதனைத் தொடா்ந்து, டேனிஷ்பேட்டை வனச்சரகா் பரசுராமமூா்த்தி தலைமையில், வனத்துறை அலுவலா்கள் தின்னப்பட்டி கருவாட்டுபாறை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, காடையாம்பட்டியில் உள்ள தொட்டிநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த பெருமாள் (55), அவரது மகன் குப்புசாமி (30) ஆகிய இருவரும் முயல்களை வேட்டையாடி வந்தது தெரியவந்தது. அவா்களை கைது செய்து வனத்துறை அதிகாரிகள், இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்து ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.