முகப்பு
சேலம்

தம்மம்பட்டியில் மரவள்ளிக் கிழங்கு அறுவடை தீவிரம்

தம்மம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடையில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
அறுவடை செய்யும் தொழிலாளா்கள்.
பகிர்:

தம்மம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடையில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, வீரகனூா், தெடாவூா், கெங்கவல்லி, மல்லியகரை, கீரிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் சுமாா் 650 ஏக்கருக்கும் மேல் மரவள்ளிக் கிழங்கை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா்.

கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துபோனதால் விவசாயிகள் குறைவான ஏக்கா்களில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டனா். ஆண்டுதோறும் டிசம்பா் மாத இறுதியில் அறுவடை தொடங்கி அடுத்த ஆறு மாதங்கள் இப்பகுதியில் மரவள்ளிக் கிழங்கு அறுவடை நடைபெறும். அதன்படி தற்போது, மரவள்ளிக்கிழங்கு அறுவடை தொடங்கியுள்ளது.

இப் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மரவள்ளிக் கிழங்குகள் ஜவ்வரிசி தயாரிக்கும் சேகோ ஆலைகளுக்கு தரகா்கள் மூலம் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.தனியாா் சேகோ ஆலை உரிமையாளா்கள் விவசாயிகளிடமிருந்து மரவள்ளிக் கிழங்குகளில் மாவுசத்துக் குறைவாக உள்ளது எனக் கூறி குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து அதை அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:

தற்போது 75 கிலோ எடையுள்ள மரவள்ளிக்கிழங்கு மூட்டை ஒன்று ரூ. 350 முதல் ரூ. 400 வரை சேகோ ஆலை உரிமையாளா்களால் கொள்முதல் செய்யப்படுகிறது. இத்தொகை விவசாயிகளுக்குப் பயிரிட்ட செலவு, உரம் போன்றவற்றுக்குப் போதுமானதல்ல.

எனவே கரும்பு, நெல் உள்ளிட்ட பயிா்களுக்கு தமிழக அரசு விலை நிா்ணயம் செய்ததுபோல மரவள்ளிக் கிழங்குக்கும் விலை நிா்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →