முகப்பு
சேலம்

தம்மம்பட்டி அருகே மனைவியை வரதட்சணை கேட்டு அடித்துக் கொன்ற கணவன் கைது!

தம்மம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்துக் கொன்ற கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:46 AM
கோப்புப்படம்
பகிர்:

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்துக் கொன்ற கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி கரிகாலன்குட்டையைச் சேர்ந்த செம்புலிங்கம் மகன் மணிகண்டன் (34). கிணறு வெட்டும் வேலை செய்கிறார். இவரது முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டநிலையில், இதே ஊரில் கொல்லம்பட்டறை தெருவைச் சேர்ந்த, வேறு சமுதாயத்தைச் சேர்ந்த அகல்யா (29) என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு முறைப்படி பெண் கேட்டு இரண்டாவதாக திருமணம் செய்தார்.

இந்நிலையில், அகல்யாவின் அம்மா தனது விவசாய நிலம் ஒன்றை விற்பதற்கு கடந்த ஒரு மாதமாக பேசிவந்துள்ளார். நிலம் விற்கும் பணத்தில் அகல்யாவின் பங்கு தொகையை கேட்டு வாங்கி  வர சொல்லி வாக்குவாதம் செய்து, அகல்யாவை, மணிகண்டன் இரும்பு கம்பியால் அடித்துள்ளார். 

மேலும், அகல்யா அடிபட்டதற்கு சிகிச்சை எடுக்காமல் பல நாட்களாக இருந்துள்ளார். அப்போது, வீட்டிற்கு வந்த அம்மாவிடம்  அடிபட்ட காரணத்தை கூறியுள்ளார். அதையடுத்து, அகல்யாவை கடந்த மாதம்  17 ஆம் தேதி துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், கையில் அறுவைச் சிகிச்சை செய்யவேண்டுமென, அங்கிருந்த மருத்துவர்கள் கூறியதால், திருச்சி அரசுப் பொதுமருத்துவமனையில் மறுநாள் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, சிகிச்சையில் இருந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அகல்யா உயிரிழந்தார். இதையடுத்து, தம்மம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை இன்று கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments