முகப்பு
சேலம்

வாழப்பாடியில் ஆற்றில் குதித்த கர்ப்பிணி: 7 நாள்களுக்குப் பின் உடல் மீட்பு!

வசிஷ்டநதியில் குதித்த கர்ப்பிணிப் பெண்ணின் உடல் 7 நாள்களுக்குப் பின் உடல் கரை ஒதுங்கியது..

Updated On : 7 டிசம்பர், 2024 at 5:16 AM
வசிஷ்டநதியில் குதித்து மாயமான கர்ப்பிணிப் பெண் மோகனாம்பாள்
பகிர்:

வாழப்பாடி அருகே கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது கணவர் வசிஷ்ட நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், ஏழு நாள்களுக்குப் பின் பெண்ணின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில் குடும்பத் தகராறில் மனமுடைந்து வசிஷ்ட நதியில் குதித்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் உடல் 7 நாட்களுக்குப்பின் இன்று காலை கரை ஒதுங்கியது. தீயணைப்பு படையினர் உதவியுடன் உடலை மீட்டு வாழப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழப்பாடி அடுத்த பேளூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ராமு(27). இவரது மனைவி மோகனாம்பாள் (19). காதல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் இடையே கடந்த டிச.1 ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமடைந்த, 6 மாத கர்ப்பிணியான மோகனாம்பாள், பேளூர் அருகே வேட்டைக்காரனூர் பாலத்தில் இருந்து வசிஷ்ட நதியில் குதித்தார். இவரைத் தொடர்ந்து, இவரது கணவர் ராமுவும் வசிஷ்ட நதியில் குதித்தார்.

இதுகுறித்து தகவலறிந்த இப்பகுதி மக்கள், நள்ளிரவு நேரத்தில் ஆற்றுக்குள் செல்போன் டவரை பிடித்துக் கொண்டு தத்தளித்தபடி உயிருக்குப் போராடிய ராமுவை உயிருடன் மீட்டனர். ஆற்றில் குதித்த கர்ப்பிணிப் பெண் மோகனாம்பாள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறித்து வாழப்பாடி தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை மாலை வரை தொடர்ந்து 4 நாள்கள் தேடியும், ஆற்றில் வெள்ளம் குறையாததால் மோகனாம்பாளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடும் பணியை நிறுத்திக் கொண்டனர்.

இன்று அதிகாலை வசிஷ்டநதியில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், பேளூர் அடுத்த ராமநாதபுரத்தில் வசிஷ்ட நதியின் கரையில் ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்ட இப்பகுதி மக்கள், வாழப்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வாழப்பாடி போலீஸார் சென்று பார்த்தபோது, கரை ஒதுங்கிக் கிடந்த பெண் சடலம் மோகனாம்பாள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரது தாயார் மற்றும் உறவினர்களை வரவழைத்து உறுதிப்படுத்திய போலீஸார், தீயணைப்பு படையினர் உதவியுடன் , மோகாம்பாளின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால் அங்கேயே பிரேதப் பரிசோதனை நடத்திட போலீஸார் முடிவு செய்துள்ளனர். 7 நாட்களுக்கு முன் வசிஷ்ட நதியில் குதித்த கர்ப்பிணிப் பெண் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →