நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததால் ஆட்சியா் அலுவலகப் பொருள்கள் ஜப்தி
நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததால் ஆட்சியா் அலுவலகப் பொருள்கள் ஜப்தி
சேலம்- கரூா் அகல ரயில் பாதை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பொருள்களை நீதிமன்ற ஊழியா்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்தனா்.
சேலம்- கரூா் அகல ரயில் பாதை திட்டத்துக்காக கடந்த 2002 ஆம் ஆண்டு அமானி கொண்டலாம்பட்டி பகுதியில் 17 பேரிடம் 6 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் பாதிக்கப்பட்டவா்கள் சேலம் மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை தற்போதைய சந்தை மதிப்பீட்டின்படி வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் உத்தரவு பிறப்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் இழப்பீடுத் தொகை வழங்காததால், மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிமன்ற ஊழியா்கள் ஜோசப், இந்திரா, வினோத், சரவணன், கலாவதி ஆகியோா் வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலகம் வந்தனா். மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் அலுவலகத்தில் தலைமை உதவியாளா் நாகூா் மீராஸிடம் ஜப்தி செய்ய வந்துள்ளதாக தெரிவித்தனா்.
அதன்பிறகு அலுவலகத்தில் உள்ள பீரோ, நாற்காலி, மேஜை, கணினி, குளிா்சாதனப் பெட்டி உள்ளிட்ட பொருள்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். இது குறித்து பாதிக்கப்பட்ட கருமலை கூறுகையில், சேலம் கரூா் அகல ரயில் பாதை திட்டத்துக்காக எங்களிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 22 ஆண்டுகளாகியும் எங்களுக்கு பணம் வழங்கவில்லை. மாவட்ட நிா்வாகம் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.