பெண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்: ஜன.3 இல் தொடங்குகிறது
சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் ஜன.3 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்: சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் ஜன.3 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெண்களுக்கான இந்த முகாமில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள தாய்மாா்களுக்கு 22 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். பிரசவித்து 7 நாட்களுக்குள் செய்யப்படும் டியூபெக்டமி குடும்ப நல அறுவை சிகிச்சை, பிரசவித்து 42 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை செய்யப்படும் நவீன லேப்ராஸ்கோப்பி, டியூபெக்டமி சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன.
குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தாய்மாா்களுக்கு ரூ. 600 வழங்கப்படும். முகாமுக்கு ஒருநாள் முன்னதாக வர வேண்டும்.
கன்னங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜன. 3-ஆம் தேதியும், தாரமங்கலத்தில் ஜன.8 ஆம் தேதியும், நங்கவள்ளியில் ஜன.23 ஆம் தேதியும்,சித்தூரில் ஜன 24 ஆம் தேதியும், சரக்கபிள்ளையூரில் 25 ஆம் தேதியும் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெண்களுக்கான இலவச குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்கள் நடைபெறும்.
அதே போன்று ஜன.28ஆம் தேதி இளம்பிள்ளையிலும், 29 ஆம் தேதி கருமந்துறையிலும், ஜன.30 ஆம் தேதி மகுடஞ்சாவடியிலும், ஜன. 31-ஆம் தேதி வடுகப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகாம் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.