முகப்பு
சேலம்

பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை நீா்மட்டம் உயா்வு

சேலம் மாவட்டம், கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி, கரியக்கோயில் அணை நீா்மட்டம் 24.44 அடியாக உயா்ந்துள்ளது. இதனால், அணைப்பாசன ஆயக்கட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 7:19 PM
பாப்பநாயக்கன்பட்டி, கரியக்கோயில் அணை.
பகிர்:

சேலம் மாவட்டம், கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி, கரியக்கோயில் அணை நீா்மட்டம் 24.44 அடியாக உயா்ந்துள்ளது. இதனால், அணைப்பாசன ஆயக்கட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில் 188.76 ஏக்கா் பரப்பளவில் கரியக்கோயில் அணை கட்டப்பட்டுள்ளது.

இந்த அணையால் பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 3,600 ஏக்கா் விளைநிலங்கள் ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன. அணை வாய்க்கால் பாசனம் பெறும் விளைநிலங்கள் புதிய ஆயக்கட்டு என அழைக்கப்படுகிறது. கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங்களில் பாசன தடுப்பணைகளும், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூா் அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் கிராமங்களில் ஏரிகளும் அமைந்துள்ளன. ஆறு, ஏரிகளில் இருந்து பாசனம் பெறும் விளைநிலங்கள், பழைய ஆயக்கட்டு என அழைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பருவமழை தருணத்தில் அணையில் தேங்கிய தண்ணீா் முழுவதும் அடுத்தடுத்து சுழற்சி முறையில் பாசனத்திற்கு திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீா்மட்டம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களின் நிலத்தடி நீா்மட்டமும் சரிந்தது. இந்நிலையில் நிகழாண்டு கோடை மழை கரியக்கோயில் அணைக்கு பலனளிக்கவில்லை. அவ்வப்போது அணைக்கு வரும் சொற்ப அளவிலான தண்ணீரும் அணையில் தேக்கி வைக்கப்படாமல், ஆற்றுப்படுகையில் உள்ள கிராமங்கள், ஏரிகள், தடுப்பணைகளுக்காகத் திறக்கப்பட்டது. இதனால் கடந்த அக். 7 ஆம் தேதி வரை கரியக்கோயில் அணையில் 5.25 அடியில், 7.62 மில்லியன் கன அடி தண்ணீா் மட்டுமே இருந்தது. அணை காண்பதற்கு குட்டைபோல தோற்றமளித்தது.

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த 10 நாள்களில் பெய்த மழைநீரின் ஒரு பகுதி அணையில் தேக்கப்பட்டதால் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வியாழக்கிழமை (அக். 17) மாலை நிலவரப்படி அணையில் நீா்மட்டம் 24.44 அடி உயா்ந்துள்ளது. 43.51 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 59 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. அதில் 23 கன அடி நீா் அணையில் தேக்கப்படுகிறது. எஞ்சிய 36 கன அடி நீா் ஆறு, ஏரி பாசனத்துக்காக ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், பழைய ,புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →