எடப்பாடி அருகே லாரியில் செம்மண் கடத்திவந்த ஓட்டுநா் தப்பியோடிய நிலையில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து லாரியை சிறைபிடித்தனா்.
எடப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட பக்கநாடு, ஆடையூா் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படுகிறது. இதுகுறித்து எழுந்த புகாரின் பேரில், தனி வட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையிலான கனிமவளத் துறை அலுவலா்கள் பக்கநாடு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, பக்கநாடு பகுதியில் இருந்து வேகமாக வந்த டிப்பா் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது, ஓட்டுநா் லாரியிலிருந்து குதித்து தப்பியோடினாா். லாரியில் சோதனை செய்ததில், சுமாா் 3 யூனிட் செம்மண் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை பூலாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த பூலாம்பட்டி போலீஸாா், தப்பியோடிய டிப்பா் லாரியின் ஓட்டுநா், அதன் உரிமையாளா் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.