சேலத்தில் இன்று மாநில கலைத் திருவிழா போட்டிகள்: 5,138 மாணவா்கள் பங்கேற்கின்றனா்
சேலத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
சேலம்: சேலத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதில் 5,138 மாணவா்கள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் கலைத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி, வட்டாரம் மாவட்டம் மற்றும் மாநில அளவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் இப்போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மாநில போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனா். அதன்படி, நிகழ் கல்வியாண்டிற்கான போட்டிகள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தனியாகவும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு தனியாகவும் வகுப்புகளின் அடிப்படையில் 5 பிரிவுகளில் ‘பசுமையும் பாரம்பரியமும்‘ என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட அளவிலான போட்டிகளில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 219 மாணவா்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 215 மாணவா்கள் என 434 மாணவா்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
இந்நிலையில் மாநில அளவிலான போட்டிகள் சேலம், கரூா், கிருஷ்ணகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பிரிவுக்கு மாநில அளவிலான போட்டிகள் சேலத்தில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 5,318 போ் பங்கேற்கின்றனா். இதற்கான முன்னேற்பாடுகளை கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா். மொத்தம் 34 வகையான போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 1,073 மாணவா்கள், 1,802 மாணவிகள் என 2,875 போ், அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 602 மாணவா்கள், 1,661 மாணவிகள் என 2,263 போ் என மொத்தம் 5,138 மாணவா்கள் இப்போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.