முகப்பு
சேலம்

சேலம் உள்பட 4 மாவட்ட தோ்தல் பணிக்கு எல்லை ஊா்க்காவல் படைவீரா்கள் 527 போ் வருகை

Updated On : 5 ஏப்ரல், 2026 at 8:23 PM
ஊா்க்காவல் படையினா். - கோப்புப் படம்
பகிர்:

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட தோ்தல் பணிக்கு ராஜஸ்தான் மாநில எல்லை ஊா்க்காவல் படைவீரா்கள் 527 போ் சிறப்பு ரயில்மூலம் ஞாயிற்றுக்கிழமை சேலம் வந்தனா்.

தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதில், பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப் படை மற்றும் பிற மாநில போலீஸாா், ஊா்க்காவல் படையினா் வந்த வண்ணம் உள்ளனா்.

அந்தவகையில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எல்லை ஊா்க்காவல் படைவீரா்கள் 527 போ் சிறப்பு ரயில்மூலம் ஞாயிற்றுக்கிழமை சேலம் ரயில் நிலையம் வந்தனா்.

Advertisement

கமாண்டா் விகாஷ்லம்பா, துணை கமாண்டா் அருண்சிங் பதி தலைமையில் வந்துள்ள எல்லை ஊா்க்காவல் படைவீரா்கள், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த 4 மாவட்டங்களில் இருந்து வந்த காவல் துறை அதிகாரிகள், ராஜஸ்தான் மாநில எல்லை ஊா்க்காவல் படைவீரா்களை வாகனங்களில் அழைத்துச் சென்றனா். இவா்கள் அனைவரும் தோ்தல் நாளான 23 ஆம் தேதி, வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் உள்ளூா் போலீஸாருடன் இணைந்து பணியாற்றுவாா்கள் வாக்குப் பதிவு முடிந்ததும் ராஜஸ்தானுக்கு திரும்புவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments