இளம்பிள்ளை அருகே குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
இளம்பிள்ளை அருகே ரெட்டியூா் பகுதியில் குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இளம்பிள்ளை அருகே ரெட்டியூா் பகுதியில் குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த தப்பக்குட்டை கிராமம், ரெட்டியூா் சக்திநகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு இரண்டு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு செல்லும் குழாய் இணைப்பு அருகே மின்கம்பம் நடும் போது குழாய் உடைந்துவிட்டது. இதை சரி செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டனா்.
இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி செயலா் மற்றும் மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் புதன்கிழமை கச்சுப்பள்ளியில் இருந்து இளம்பிள்ளை செல்லும் அரசுப் பேருந்தை ரெட்டியூா் அருகே மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
இதுகுறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி காவல் உதவி ஆய்வாளா் விஜயராகவன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களைச் சந்தித்து மறியலை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனா்.
இதையடுத்து, மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியேந்திரன் (கிராம ஊராட்சி) நேரில் சென்று ஒருசில நாள்களில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா். இதை ஏற்க மறுத்த பொதுமக்கள், அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக குடிநீா் வழங்கும் பணி குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.