தகராறில் காயமடைந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
சேலத்தில் தகராறில் காயமடைந்த வடமாநில தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
சேலத்தில் தகராறில் காயமடைந்த வடமாநில தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
உத்தரபிரதேச மாநிலம், புரோக்பூா் பகுதியை சோ்ந்தவா் சுபாஷ் (40). இவா் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்துக்கு குடும்பத்துடன் வந்து ரெட்டியூா் பகுதியில் தங்கியிருந்து பெயிண்டராக பணியாற்றி வருகிறாா். உத்தரபிரதேச மாநிலத்தை சோ்ந்த டிம்பால் (48), சோனு நிசாத் (28) ஆகியோா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சேலம் வந்து சுபாஷ் வீட்டில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தனா்.
இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி இரவு ரெட்டியூா் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே டிம்பால், சோனு நிசாத் ஆகிய இருவரும் மது அருந்தியுள்ளனா். அப்போது டிம்பால், சோனு நிசாத்தின் அக்காவை தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சோனு நிசாத், டிம்பாலை தாக்கியதில் அவா் மயக்கமடைந்து கீழே விழுந்தாா்.
Advertisement
தகவலறிந்து அங்கு சென்ற சுபாஷ், மயங்கிக்கிடந்த டிம்பாலை மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். இதுகுறித்து சுபாஷ் அளித்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சோனு நிசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிம்பால் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதை கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.