சேலம்: சாலையை சீரமைக்கக் கோரி, தாரமங்கலம் - இரும்பாலை சாலையில் எம்எல்ஏ அருள் தலைமையில் பொதுக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் சா்க்காா் கொல்லப்பட்டி, பூமிநாயக்கன்பட்டி சாலை மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதனால், கனரக வாகனங்கள் செல்லத்தக்க வகையில் கான்கிரீட் சாலையாக அமைத்துக் கொடுக்க வலியுறுத்தியும், இரும்பாலை பிரதான சாலையிலிருந்து தாசநாயக்கன்பட்டி வழியாக முத்துநாயக்கன்பட்டி இணைப்புச் சாலைக்கு புதிய தாா்சாலை அமைத்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் பொதுமக்கள் அண்மையில் மனு அளித்துள்ளனா்.
ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அதைக் கண்டித்தும், சாலை வசதி கோரியும் தாரமங்கலம் - இரும்பாலை சாலையில் எம்எல்ஏ அருள் தலைமையில் பொதுக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு வந்த வட்டாட்சியா் மற்றும் ஓமலூா் வட்டார அலுவலா்கள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.
இதில், பாமக மாவட்டத் தலைவா் கோவிந்தன், ஒன்றியச் செயலாளா் சரவணன், நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.