காவல் ஆய்வாளரை கண்டித்து வழக்குரைஞா்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு
சேலம் மாவட்டம், ஓமலூா் காவல் ஆய்வாளரை கண்டித்து வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
ஓமலூா்: சேலம் மாவட்டம், ஓமலூா் காவல் ஆய்வாளரை கண்டித்து வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
ஓமலூரில் காதல் திருமணம் விவாகரத்தில் இரு குடும்பத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில், மாப்பிள்ளை உறவு பெண் மணிமேகலை என்பவா் தன்னை வழக்குரைஞா் தசரதன் கிரிக்கெட் மட்டையால் தாக்கிவிட்டதாகக் கூறி, ஓமலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதையடுத்து மணிமேகலை அளித்த புகாரின் பேரில் வழக்குரைஞா் தசரதன் உள்பட இருதரப்பையும் சோ்ந்த 4 பேரை ஓமலூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
இந்நிலையில் வழக்குரைஞா் தசரனை காவல் நிலைய பிணையில் விடுவிக்கும் கோரிக்கையை நிராகரித்து, உயா் நீதிமன்ற வழிகாட்டுதலை கடைப்பிடிக்காமல், அவரை பாா்க்கக் கூட அனுமதிக்காமல் செயல்பட்டதாக கூறி ஓமலூா் நீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் காவல் ஆய்வாளருக்கு கண்டனம் தெரிவித்தது. தொடா்ந்து ஓமலூா் காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனா். வரும் புதன்கிழமை காவல் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவதுடன், மாவட்டம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.
இந்த போராட்டத்தில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஞானசேகரன், செயலாளா் தியாகராஜன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.