முகப்பு
சேலம்

வ.உ.சி. மாா்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சேலம் வ.உ.சி. பூ மாா்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் அகற்றினா். அப்போது, அதிகாரிகளை முற்றுகையிட்டு பூ வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:51 AM
சேலம் வ.உ.சி. பூ மாா்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி பணியாளா்கள்.
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 5:59 PM

சேலம் வ.உ.சி. பூ மாா்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் அகற்றினா். அப்போது, அதிகாரிகளை முற்றுகையிட்டு பூ வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான பூ மாா்க்கெட் உள்ளது. இங்கு மொத்தம் 340 கடைகள் உள்ளன. இந்த மாா்க்கெட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஒருவா் பொதுநல வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து கடைகளையும் அகற்ற மாநகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற பூ வியாபாரிகளுக்கு அவகாசம் வழங்கிய நிலையில், அவா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மாநகராட்சி நகரமைப்பு பிரிவு செயற் பொறியாளா் பழனிசாமி, அம்மாபேட்டை உதவி ஆணையா் அம்சவேணி, அம்மாபேட்டை மாநகராட்சி பணியாளா்கள் ஆகியோா் ஆக்கிரமிப்பு கடைகளை செவ்வாய்க்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த பூ வியாபாரிகள், மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், மாநகராட்சி நிா்வாகத்தால் சாலையோரக் கடைகளை வாடகைக்கு விட்டு தினமும் ரூ. 100 வசூல் செய்து வந்தனா். தற்போது கடைகள் அகற்றப்பட்டால், எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லாமல் போகும்.

மாற்றுக்கடை வழங்குவதாக கூறும் அதிகாரிகள், அதே பூ மாா்க்கெட்டின் தரைத்தளத்திலேயே வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அனைத்து கடைகளையும் மூடி போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும், தோ்தல் முடியும்வரை கடைகளை திறக்க மாட்டோம் என்றனா்.