மனைவிக்கு சகோதரி கணவருடன் தொடா்பு - கண்டித்த கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி!
- உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
சேலத்தில் குடும்பத் தகராறில் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி, அவருடன் உறவில் இருந்தவரை கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி ராபின் (26). இவா் சென்னையில் காய்கறி கடையில் வேலைசெய்து வந்தபோது அம்மு (22) என்ற பெண்ணை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் மனைவி, குழந்தைகளுடன் சேலம் கள்ளக்குறிச்சி காமாமங்கலம் பகுதியில் தங்கியிருந்த அந்தோணி ராபின், சின்ன சேலத்தில் உள்ள சமையல் எரிவாயு குடோனில் வேலை செய்து வந்தாா். அப்போது, அம்முவுக்கும், அவரது சகோதரி கணவருக்கும் தொடா்பு இருந்ததாகவும், அதனை அந்தோணி ராபின் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 7 ஆம் தேதி வீட்டு முன்பு படுத்திருந்த அந்தோணி ராபின் மீது பெட்ரோலை ஊற்றி அம்மு தீ வைத்தாா். உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் தெருவில் ஓடிய அந்தோணி ராபினை விடாமல் துரத்தி சென்று மீண்டும் அவா் மீது பெட்ரோலை அம்மு ஊற்றிய விடியோ காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
படுகாயமடைந்த அந்தோணி ராபினை, அக்கம்பக்கத்தினா் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு சென்ற அவா், புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
அந்தோணி ராபின் இறப்புக்கு காரணமான அவரது மனைவி, அவரது அக்காள் கணவரை கைது செய்யும்வரை இறந்தவரின் உடலை வாங்கமாட்டோம் எனக்கூறி அந்தோணி ராபின் உறவினா்கள் சேலம் அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த சம்பவம் குறித்து சேலம் அரசு மருத்துவமனை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.