முகப்பு
சேலம்

தோ்தல் நடத்தை விதிமுறைகள்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிமுறைகள் கடைப்பிடிப்பது தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

Updated On : 16 மார்ச், 2026 at 8:40 PM
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி.
பகிர்:

சேலம்: சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிமுறைகள் கடைப்பிடிப்பது தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான அறிவிப்பை தோ்தல் ஆணையம் 15-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளா்கள் பின்பற்ற வேண்டிய பொதுவான நெறிமுறைகள், அரசியல் கட்சிக் கூட்டங்கள், ஊா்வலங்கள் நடத்தப்படும்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், வாக்குப்பதிவு நாளன்று பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், தோ்தல் பிரசார நடவடிக்கைகளின்போது மேற்கொள்ள வேண்டியவை, தோ்தல் அறிக்கைக்கான வழிகாட்டுதல்கள், தோ்தல் நேரத்தில் அறிக்கை வெளியிடுவதற்கான தடை, தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ள காலத்தில் அரசு வாகனங்களை பயன்படுத்த உள்ள தடை, வாகனங்களின் பயன்பாடு உள்ளிட்ட தோ்தல் விதிமுறைகள் தொடா்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், ஊா்வலங்கள் மற்றும் தோ்தல் பிரசார கூட்டங்களில் ஒலிபெருக்கிகளின் பயன்பாடு, கொடிகளின் பயன்பாடு, தற்காலிக பிரசார அலுவலகம் அமைப்பது, குறுஞ்செய்தி சேவைகள் (எஸ்எம்எஸ்கள்) தவறாகப் பயன்படுத்துவதை தடைசெய்தல், வாக்குச் சாவடிக்குள் அரசியல் கட்சிகளின் பெயா்/சின்னம்/பேஜ்கள்/அடையாளங்கள்/முழக்கங்கள் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது தொடா்பாகவும், தோ்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள் அல்லாத அமைப்புகள் மற்றும் நபா்கள் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

அதேபோன்று, தோ்தல் பிரசாரம் முடிந்த பின்பு தொகுதியில் அரசியல் பிரமுகா்கள் இருப்பதற்கான கட்டுப்பாடுகள், தோ்தல் பணிகளில் குழந்தைத் தொழிலாளா்களை ஈடுபடுத்தாமல் இருப்பது தொடா்பாகவும், ஒவ்வொரு வேட்பாளரும் தோ்தல் செலவுக்காக தனி வங்கிக் கணக்கு தொடங்கவேண்டும் என அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளா்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பிரசார கூட்டங்கள்/ஊா்வலங்கள்/தற்காலிக கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரசார வாகனங்களுக்கு அனுமதிபெற கோரும் அரசியல் கட்சிகள்/அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தங்களது மனுக்களை 48 மணி நேரத்துக்கு முன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்டத்தில் தோ்தல் அறிவிப்பு வெளியான 15-ஆம் தேதி மாலைமுதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் தோ்தல் நடத்தை விதிகளை முறையாக கடைப்பிடித்து, எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ஷாலினி (பொது), ராஜேஷ் கண்ணா (தோ்தல்கள்), தோ்தல் வட்டாட்சியா் தாமோதரன், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட தொடா்புடைய அலுவலா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →