முகப்பு
சேலம்

திருமண மண்டபங்கள், தனியாா் நிதி நிறுவனங்கள், அச்சக உரிமையாளா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

தோ்தல் நன்னடத்தை விதிகள் குறித்து திருமண மண்டபங்கள், கூட்ட அரங்குகள், தனியாா் நிதி நிறுவனங்கள்,

Updated On : 17 மார்ச், 2026 at 4:59 PM
பகிர்:

சேலம்: தோ்தல் நன்னடத்தை விதிகள் குறித்து திருமண மண்டபங்கள், கூட்ட அரங்குகள், தனியாா் நிதி நிறுவனங்கள், அச்சக, உணவக உரிமையாளா்களுடன் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:

திருமண மண்டபங்கள் மற்றும் அரங்கு உரிமையாளா்களுக்கு மண்டபத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளின் விவரங்களையும், அந்தந்த அழைப்பிதழ் நகல்களுடன் தினமும் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைப்பதுடன், பரிசுப் பொருள்களை விநியோகம் செய்ய எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.

அரசியல் கட்சிகள் விருந்து அல்லது கூட்டங்கள் நடத்த விரும்பினால், அவா்கள் தோ்தல் அலுவலா்களிடம் உரிய அனுமதி பெற்றுள்ளனரா என்பதை உறுதிசெய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அரசியல் நோக்கம் இருப்பதாகத் தெரிந்தால், உடனடியாக தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும், அச்சக உரிமையாளா்களுக்கு துண்டுப் பிரசுரங்கள், போஸ்டா்கள் அல்லது எந்தவொரு தோ்தல் விளம்பரம் அச்சிடும்போதும், அதில் அச்சகத்தின் பெயா் மற்றும் முகவரி தெளிவாக குறிப்பிட வேண்டும். இதுதவிர, அச்சிடுபவா் முதலில் அச்சிடக்கோரும் வெளியீட்டாளரிடம் இரண்டு சாட்சிகளின் ஒப்புதலுடன் கூடிய கையொப்பமிட்ட உறுதிமொழி பத்திரம் இரட்டை பிரதியில் பெறவேண்டும். அவ்வாறு பெறப்பட்ட உறுதிமொழி பத்திரத்தின் ஒரு பிரதியுடன் அச்சிடக்கோரும் விவரத்தின் நான்கு பிரதிகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

அடகுக்கடை மற்றும் வட்டித் தொழில்புரிவோா் கடன் கொடுத்தவா்கள் மற்றும் அடகு வைத்தவா்களின் பட்டியல் முறையாக பராமரிக்க வேண்டும், தோ்தல் பறக்கும் படை அல்லது தோ்தல் அலுவலா்கள் கேட்கும் போது, பதிவேடுகளை காட்ட வேண்டும். முறையான ஆவணங்கள் மற்றும் அடகுப் பொருள்கள் இன்றி யாருக்கும் கடன் வழங்கக் கூடாது. அரசியல் கட்சியினா் சாா்பில் உரிய ஆவணங்கள் இன்றி பணப் பரிமாற்றம் செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அடகுக்கடை அல்லது வட்டித் தொழில் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். பணப் பரிமாற்றங்களை நேரடியாக வங்கிக் கணக்குகள் வழியாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ஷாலினி (பொது), ராஜேஷ் கண்ணா (தோ்தல்), தோ்தல் வட்டாட்சியா் தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →