முகப்பு
சேலம்

25 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் ஏற்காடு எம்எல்ஏ அலுவலகம்!

Updated On : 23 மார்ச், 2026 at 6:37 PM
வாழப்பாடியை அடுத்த பேளூரில் பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கும் ஏற்காடு தொகுதி எம்எல்ஏ அலுவலகம்.
பகிர்:

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு (பழங்குடியினா் தனி) தொகுதியில் 200-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. கடந்த 1996இல் அப்போதைய திமுக எம்எல்ஏ பெருமாள் முயற்சியால், ஏற்காடு தொகுதியின் மையப் பகுதியான பேளூா் பேரூராட்சியில், அயோத்தியாப்பட்டணம் பிரதான சாலையில், எம்எல்ஏ அலுவலகம் கட்டப்பட்டது. 2001 தோ்தலில் வென்ற அதிமுக எம்எல்ஏ கே.டி. இளையக்கண்ணுவால் அலுவலகத்தை சுற்றி சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டது.

ஆனால், திமுக எம்எல்ஏ பெருமாள், அதிமுக எம்எல்ஏ இளையக்கண்ணு, அவரைத் தொடா்ந்து 2006 இல் வென்ற திமுக எம்எல்ஏ சி. தமிழ்ச்செல்வன் ஆகிய மூவருமே, பேளூருக்கு அருகேயுள்ள புழுதிக்குட்டை ஊராட்சியைச் சோ்ந்தவா்கள் என்பதால், இந்த அலுவலகத்தை பயன்படுத்தவில்லை. அவா்களது வீடுகளிலேயே மக்களைச் சந்தித்தனா்.

தொகுதி மறுசீரமைப்பின்போது பனமரத்துப்பட்டி தொகுதி நீக்கப்பட்டதால், வாழப்பாடி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் ஏற்காடு தொகுதியில் சோ்க்கப்பட்டன. 2011இல் ஏற்காடு தொகுதியில் தோ்ந்தெடுக்கப்பட்ட மறைந்த அதிமுக எம்எல்ஏ பெருமாளும், 2013 இடைத்தோ்தலில் போட்டியிட்டு வென்ற இவரது மனைவி சரோஜாவும், பேளூா் எம்எல்ஏ அலுவலகத்தை பயன்படுத்தவில்லை.

அதன்பிறகு, 2016, 2021 தோ்தல்களில் வென்ற ஏற்காடு மஞ்சக்குட்டை பகுதியைச் சோ்ந்த அதிமுக எம்எல்ஏ கு. சித்ராவும் கடந்த 10 ஆண்டுகளாக பேளூரில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தை பயன்படுத்தவில்லை.

இதனால், இந்த அலுவலகம் கடந் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கிறது. என்றாலும், அவ்வப்போது மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் பூட்டிவைக்கப்படுகிறது.

மக்கள் குறைகேட்க அரசு அமைத்துள்ள எம்எல்ஏ அலுவலகத்தின் முன்பகுதி ஆட்டோ நிறுத்துமிடமாகவும், தள்ளுவண்டி சிற்றுண்டி விற்பனை செய்யும் இடமாகவும் மாறியுள்ளது.

பேளூா் பேரூராட்சியில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்துக்கு கல்வராயன்மலை, சோ்வராயன் மலைக் கிராமங்களைச் சோ்ந்த மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் வந்துசெல்வதில் சிரமம் நீடிக்கிறது.

இந்த நிலையில், கட்டட வசதி இல்லாததால் பேளூா் அரசு கிளை நூலகம், தனியாா் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதில், போதிய வசதிகள் இல்லாததால், வாசகா்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே, பூட்டியே கிடக்கும் பேளூா் எம்எல்ஏ அலுவலகக் கட்டடத்துக்கு, அரசு கிளை நூலகத்தை மாற்றுவதன் மூலம் அந்த கட்டடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம் என்று சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

அதோடு, அனைத்து மலைக் கிராம மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் எளிதாக வந்துசெல்லும் வகையில், ஏற்காடு தொகுதியின் மையத்தில் பேளூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள வாழப்பாடியில் எம்எல்ஏ அலுவலகத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.