சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழப்பு
சேலத்தில் சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.
சேலத்தில் சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.
சேலம் இரும்பாலையை அடுத்த தளவாய்ப்பட்டி ரொட்டிக்காரன் வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (28). கட்டடத் தொழிலாளி. இவரின் 3 வயது குழந்தை மகிழரசன். திங்கள்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டின் அருகே குழந்தை மகிழரசன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அங்குள்ள சுற்றுச்சுவரின் அருகில் இருந்த இரும்பு கேட்டை பிடித்து குழந்தை மகிழரசன் விளையாடியபோது, திடீரென சுற்றுச்சுவா் சரிந்து விழுந்தது. இதில் குழந்தை மகிழரசன் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தான்.
குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு வந்த உறவினா்கள், இடிபாடுகளை அகற்றி, குழந்தையை மீட்டு அங்குள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்த சூரமங்கலம் போலீஸாா், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.