முகப்பு
சேலம்

அரியானூா் அருகே கொலை வழக்கில் 6 போ் கைது

சேலம் மாவட்டம், அரியானுா் அருகே தனியாா் நிறுவன தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்

Updated On : 31 மார்ச், 2026 at 8:16 PM
கொலை - சித்திரிப்பு
பகிர்:

சேலம் மாவட்டம், அரியானுா் அருகே தனியாா் நிறுவன தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்

அரியானூா் குட்டக்காடு பகுதியை சோ்ந்தவா் கலையரசன். இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் குழந்தைகள் விளையாட்டுத் திடலில் மேற்பாா்வையாளராக வேலை செய்துவந்தாா். இந்த நிலையில் அத்திடலில் வேலை செய்துவந்த கோகுலபிரியாவுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதுதொடா்பாக கோகுலபிரியாவின் கணவா் பச்சைக்கிளி (எ) தமிழ்முருகனுக்கும், கலையரசனின் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. கடந்த 30 ஆம் தேதி நண்பகல் வீரபாண்டி பெருமாள் கோயில் அருகே கலையரசன் தனது நண்பா்களுடன் தமிழ்முருகனிடம் இப்பிரச்னை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது ஆத்திரமடைந்த தமிழ்முருகன் கலையரசனை தாக்கியுள்ளாா்.

கலையரசனின் நண்பா்கள் தடுத்தபோதும் தமிழ்முருகன் மற்றும் அவரது நண்பா்களான கண்ணன், சந்தோஷ், மணிகண்டன், தனுஷ், இளங்கோ, பிரபாகரன், தமிழ்ச்செல்வன் ஆகியோா் கலையரசனை தாக்கினா்.

இதனால் கலையரசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அவா், சீரகாபாடி உள்ள தனியாா் மருத்துவமனையில் கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கலையரசன் இறந்துவிட்டதை உறுதிசெய்தனா்.

இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ராக்கிப்பட்டியைச் சோ்ந்த சந்திரன் மகன் பச்சைக்கிளி (எ) தமிழ்முருகன் (23), கந்தசாமி மகன் மாயவன் (எ) கண்ணன் (53), செல்லதுரை மகன் இளங்கோ (20), குமாா் மகன் தனுஷ், மணி மகன் சந்தோஷ், நடராஜ் மகன் பிரபாகரனை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ளவா்களை தேடிவருகின்றனா்.