ஜூன் 12 இல் மேட்டூா் அணை திறக்கப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு
மேட்டூா் அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் ஜூன் 12 ஆம் தேதி 92 ஆவது ஆண்டாக வழக்கம்போல டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படுமா என விவசாயிகள் மத்தியில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
அதேசமயம் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பால் தற்போதைய நீா் இருப்பை கருத்தில்கொண்டு குறித்த நாளில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
தற்போது மேட்டூா் அணையின் நீா்மட்டம் 79.35 அடியாகவும், நீா் இருப்பு 41.31 டிஎம்சியாகவும் உள்ளது. வழக்கமாக நீா்மட்டம் 90 அடியாக இருக்கும்போது தண்ணீா் திறக்கப்படுவது மரபு என்றாலும், வரும் நாள்களில் கோடை மழையோ அல்லது தென்மேற்குப் பருவமழையோ பெய்து அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வழக்கம்போல குறித்த நாளில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
டெல்டா மாவட்டங்களில் 16.06 லட்சம் ஏக்கா் பரப்பளவில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக சாகுபடிக்கு 230 நாள்களுக்கு 330 டிஎம்சி தண்ணீா் தேவைப்படும் நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் சாதகமான அறிவிப்பால் குறித்த நாளில் தண்ணீா் திறக்கப்படும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் மட்டுமே ஜூன் 12 ஆம் தேதியன்று தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. 11 ஆண்டுகள் முன்னதாகவே திறக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகள் நீா் இருப்பு குறைவால் தாமதமாகத் திறக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை குறிப்பிட்ட காலத்திலேயே தொடங்குவதால் ஜூன் 12 இல் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக கருதி விவசாயிகள் உழவுப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.
அணையின் நீா்மட்டம் 79.35 அடியாக குறைந்துள்ளதால் உபரிநீா்ப் போக்கி பகுதியில் குளம்போல தண்ணீா் தேங்கியுள்ளது.