பசுமலை அருகே "அம்மா' திட்டம்
மதுரை மாநகராட்சி 95 ஆவது வார்டிலுள்ள தியாகராஜர் காலனியில் அழகிய மதுரை மாநகர் திட்டம் (அம்மா திட்டம்) சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி 95 ஆவது வார்டிலுள்ள தியாகராஜர் காலனியில் அழகிய மதுரை மாநகர் திட்டம் (அம்மா திட்டம்) சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தலைமை வகித்துப் பேசியதாவது: தமிழகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, 110 ஆவது விதியின் கீழ் நாள்தோறும் பல நல்ல திட்டங்களை முதல்வர் கொண்டு வருகிறார். மதுரை மாநகராட்சியில் உள்ள 72 வார்டுகளில் கடந்த ஓர் ஆண்டில் 90 சதவிகிதம் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் வரும் 3 ஆண்டுகளில் புதிதாக இணைக்கப்பட்ட 28 வார்டுகளிலும் சாலை, குடிநீர் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, தன்னிறைவு பெற்ற வார்டுகளாக்கப்படும் என்றார்.
Advertisement
Advertisement
பின்னர், நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ், பயனாளிகள் 26 பேருக்கு ரூ. 6.50 லட்சத்துக்கான காசேலைகளை வழங்கினார்.
இதில், 150 மாநகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டு, தியாகராஜர் காலனியில் குப்பை அகற்றுதல், மழைநீர் வடிகால் சுத்தப்படுத்துதல், தெரு விளக்கு, குடிநீர் குழாய், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை செய்தனர்.
நிகழ்ச்சியில், ஆணையர் இரா. நந்தகோபால் முன்னிலை வகித்தார். 95 ஆவது வார்டு கவுன்சிலர் இரா. முத்துக்குமார் வரவேற்றார். உதவி ஆணையர் தேவதாஸ், மண்டலத் தலைவர் சாலைமுத்து, திட்ட அலுவலர் பழனிச்சாமி, ஊராட்சி செயலர் பாலமுருகன், அதிமுக நகரச் செயலர்கள் பன்னீர்செல்வம், பாலமுருகன், ஜெ. பேரவை ஒன்றிய துணைத் தலைவர் வி.எஸ். முருகன், வழக்குரைஞர் ரமேஷ், இலக்கிய அணிச் செயலர் த. நேரு, அதிமுக இளைஞரணி விஜயராமன், முன்னாள் கவுன்சிலர் சந்திரன், தொழிற்சங்க நகரத் தலைவர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.