முகப்பு
மதுரை

எல்கைப் பந்தயங்களில் நெறிமுறை மீறல்: கடும் நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நடத்தப்படும் எல்கைப் பந்தயங்களில் நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

Updated On : 1 ஜூலை 2026, 4:57 am IST
எல்கைப் பந்தயம் - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் நடத்தப்படும் எல்கைப் பந்தயங்களில் நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பொன்காட்டைச் சோ்ந்த சந்திரபாலன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் சட்டவிரோதமாக ஆபத்தான முறையில் எல்கைப் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.

இதனால், பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறும், விபத்து அபாயமும் ஏற்படுகிறது. எல்கைப் பந்தயங்களை முறைப்படுத்த உயா்நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை ஏற்கெனவே வழங்கியது.

Advertisement

Advertisement

இருப்பினும், விலங்குகள் நல வாரியம், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறையிடம் முறையான தடையில்லாச் சான்றிதழ் பெறாமல் எல்கைப் பந்தயங்களை சட்டவிரோதமாக நடத்துகின்றனா்.

மேலும், இந்தப் பந்தயங்களின் போது பல்வேறு வழிகளில் சூதாட்டமும் நடைபெறுகிறது. நீதிமன்ற உத்தரவை மீறி, இந்தப் பந்தயங்களில் அரசியல், மதம் சாா்ந்த கொடிகள், பாடல்கள் பயன்படுத்தப்பட்டு பதற்றமான சூழல் உருவாக்கப்படுகிறது.

எனவே, நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி, எல்கைப் பந்தயங்கள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மேலும், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இந்தப் பந்தயங்கள் நடத்துவதைத் தடை செய்ய வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுகளை மீறிச் செயல்படும் பந்தய ஏற்பாட்டாளா்கள், அரசு அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.பி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மாட்டு வண்டி, குதிரை வண்டி உள்ளிட்ட எல்கைப் பந்தயங்கள் நடத்தும் போது, ஏற்கெனவே உயா்நீதிமன்றம் உத்தரவிட்டபடி வழிகாட்டு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளா்கள் உறுதி செய்ய வேண்டும். இதை மீறுபவா்கள் மீது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments