பழனியை அடுத்த பெரியம்மாபட்டி ஊராட்சி புளியம்பட்டியில் கட்டி முடித்தும் பொதுவிநியோக அங்காடி திறக்கப்படாததால் ரேஷன் பொருள்கள் வாங்க பல கி.மீ. தூரம் செல்ல வேண்டி இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பெரியம்மாபட்டி ஊராட்சி புளியம்பட்டியில் கடந்த 2010-11 ஆம் ஆண்டில் நீண்ட கால திட்டத்தின் கீழ் பொதுமக்கள் வசதிக்காக பல லட்சம் செலவில் புதிதாக பொதுவிநியோக அங்காடி கட்டப்பட்டது.
இந்த அங்காடி கட்டிமுடிக்கப்பட்டு பல நாள்களாகியும் திறக்கப்படாமல் இருந்து வருவதால் கட்டடம் சேதமடைந்து
வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பல கி.மீ. தூரம் செல்ல வேண்டி இருப்பதாகவும் கட்டடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் கட்டடத்துக்கு செல்லும் வழியில் வாய்க்கால் உள்ளதால், அதில் தண்ணீர் செல்லும் நேரம் அங்காடிக்குச் செல்ல
முடியாத நிலை ஏற்படும் என்பதால் அதில் பாலம் அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.