சாணார்பட்டி அருகே கிறிஸ்தவ தேவாலயம் முற்றுகை
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மதமாற்றம் செய்வதாகக் கூறி, கிறிஸ்தவ தேவாலயத்தை இந்து முன்னணியினர் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மதமாற்றம் செய்வதாகக் கூறி, கிறிஸ்தவ தேவாலயத்தை இந்து முன்னணியினர் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அஞ்சுகுழிப்பட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில், அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அஞ்சுகுழிப்பட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளை அங்கு அழைத்துச் சென்று, மதப் பிரசாரம் நடைபெறுவதாகவும், மத மாற்றம் நடைபெறுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த தேவாலயத்தை இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட பொதுச் செயலர் எஸ்.சங்கர் கணேஷ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற சாணார்பட்டி போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தேவாலயம் செயல்படுவதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், கோட்டாட்சியர் தலைமையிலான கூட்டத்தில் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.