பைக்கில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள இடையகோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள இடையகோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ம.மு.கோவிலூரைச் சேர்ந்த மலைப்பன் மகன் பிரபாகரன் (30). கொத்தனார். இவரும், இவரது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த ராஜ்குமார் (29) என்பவரும் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மாம்பாறை முனியப்பன் கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் சாமி கும்பிட சென்றனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஒட்டன்சத்திரம்- மார்க்கம்பட்டி சாலை சின்னக்காம்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்ற போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்தகாயம் அடைந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லேசான காயத்துடன் தப்பிய ராஜ்குமார் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து இடையகோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.