கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இறந்த மற்றொரு பெண்ணின் சடலம் மீட்பு
கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இறந்த மற்றொரு பெண்ணின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இறந்த மற்றொரு பெண்ணின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியில் சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான காப்பி தோட்டம் உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டவர் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இந்த காப்பி தோட்டத்திற்கு, பண்ணைக்காட்டைச் சேர்ந்த 6 பேர் சனிக்கிழமை வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் பெய்த பலத்த மழையால் மூலையாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. உடனே தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள் ஆற்றைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது தோட்ட மேலாளர் ஆண்டவரின் மனைவி ஜெயலட்சுமி (45), விஜி(25) ஆகிய 2 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதனையடுத்து தாழையோடை பகுதியில் இறந்த நிலையில் ஜெயலட்சுமியின் சடலத்தை கொடைக்கானல் போலீசார் மீட்டனர். இரவு நீண்ட நேரமானதால் மற்றொரு பெண்ணை தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மீட்புக்குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மூலையாற்றிலிருந்து 3 கி.மீ தூரமுள்ள தீவன ஓடைப்பகுதியில் விஜியின் சடலத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இருவரின் சடலமும், பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் இறந்த பெண்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.