தியான கண்காட்சி பேருந்து திண்டுக்கல் வருகை
தியானத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் பேருந்து திங்கள்கிழமை திண்டுக்கல்லுக்கு வந்தது.
தியானத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் பேருந்து திங்கள்கிழமை திண்டுக்கல்லுக்கு வந்தது.
பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலாயாவின் துணை நிறுவனமான ராஜயோக கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் இளைஞர் பிரிவு சார்பில் அகில இந்திய அளவில் தேசிய கண்காட்சி பேருந்து பேரணி நடைபெற்று வருகிறது.
கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் குஜராத்தில் தொடங்கிய இந்த பேரணி, எனது பாரதம் பொன்னான பாரதம் என்ற தலைப்பில் பல்வேறு நகரங்களுக்கும் சென்று வருகிறது. 2020 ஆம் ஆண்டு நிறைவு பெறும் வகையில் திட்டமிடப்பட்டு நடைபெற்று வரும் இப்பேருந்து பேரணி திண்டுக்கல் நகருக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது.
முன்னதாக சின்னாளப்பட்டிக்கு வந்த அந்த பேருந்துக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சின்னாளப்பட்டி காவல் நிலையம் எதிரே உள்ள மைதானத்தில் பேருந்து நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர், திண்டுக்கல் பேருந்து நிலையம், ஆர்.எஸ்.சாலை, கோட்டை மாரியம்மன்கோயில் வளாகத்தில் பேருந்து நிறுத்தப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. பேரணி பேருந்தில் வந்த ராஜயோக கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் இளைஞர் பிரிவினர், தியானத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தனர்.
வாழ்வின் அனைத்து துன்பகங்களுக்கும் ஆசையே அடிப்படை காரணம்.
சுக, துக்க உணர்வுகளிலிருந்து விடுபடுவதற்கு தியானமே சிறந்த வழிகாட்டி. தியானத்தின் மூலம் நம் உணர்வுகளை கட்டுப்படுத்தினால், பயனற்ற காரியங்களின் மீது நம்முடைய சக்தி வீணாவதை தடுக்க முடியும் என்பன உள்ளிட்ட கருத்துகள் வலியுறுத்தப்பட்டன. இந்த நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.