முகப்பு
திண்டுக்கல்

கூட்டுறவுச் சங்கங்களுக்கு செயலாட்சியர் நியமிக்கக் கோரி மனு

கூட்டுறவுச் சங்கங்களைத் தொய்வின்றிச் செயல்படுத்தச் செயலாட்சியர்களை நியமிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 22 மே, 2018 at 12:34 AM
பகிர்:

கூட்டுறவுச் சங்கங்களைத் தொய்வின்றிச் செயல்படுத்தச் செயலாட்சியர்களை நியமிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்தனர்.
அப்போது மாவட்டத் தலைவர் கே.அன்பரசு, செயலர் ஏ.ரவிச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் 4,563 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முதல்கட்டமாக 1,120 சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற்று, புதிய நிர்வாகக் குழு பதவியேற்றுள்ளது. சில சங்கங்களில் தேர்தல் நிறுத்தப்பட்டுச் செயலாட்சியர் நியமனம் செய்யப்பட்டுப் பணிபுரிந்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக 2,3 மற்றும் 4ஆவது கட்டங்களில் நடைபெற்ற தேர்தல்களில், நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டு, முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால், நகைக்கடன், விவசாயக் கடன், உரம் மற்றும் இடுபொருள்கள் வழங்குதல் உள்ளிட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், சங்கங்களுக்குத் தேவையான நிதி வழங்கப்படாததால் நியாய விலைக் கடைகளையும் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சங்கங்களில் உடனடியாகச் செயலாட்சியர் நியமனம் செய்ய வேண்டும்.
இக் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் சுமார் 25ஆயிரம் பணியாளர்கள் திங்கள்கிழமை முதல் தொடர் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும், 197 சங்கங்களைச் சேர்ந்த 480 பணியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர் என்றனர்.
இதுதொடர்பான மனு, மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்திலும் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.