கொடைக்கானல் கிறித்தவக் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில், இணைய பாதுகாப்பு மற்றும் மின்னணு ஆட்சி என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளர் சாம் ஆப்ரகாம் தலைமை வகித்துப் பேசினார். இதில், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் பாலு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது:
நம்முடைய அனைத்து தகவல்களையும் இணையத்தில் நாம் இலவசமாக பதிவிறக்கம் செய்யும்போது மற்றொருவர் அதை பயன்படுத்த முடியும் என்றும், 2-ஜி, 4-ஜி பற்றிய முழுமையான விளக்கத்தையும், இணைய தளப் பிரச்னைகள் குறித்தும் அதை தவிர்க்கக் கூடிய முறைகளையும் விளக்கினார். கருத்தரங்கில், பேராசிரியர்கள் விஜயரகுநாதன், ஆன்சி, எபி தாமஸ், கேரி ஜான்சன் உள்ளிட்ட பலர் இணைய தொடர்பு, நகரம், சமூக நம்பிக்கையான கம்பியில்லா சேவை, கணினி, செயற்கைகோள், தனியார் வலையமைப்புகள், இணைய தாக்குதல்கள் குறித்தும் பேசினர்.
நிகழ்ச்சியில், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகக் கல்லூரி, பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, தேனி கே.பி.என். கல்லூரி மற்றும் கொடைக்கானல் கிறித்தவக் கல்லூரி மாணவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் சுபா நன்றி கூறினார்.