போடி கண்மாய்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தேனி மாவட்டத்தில் பல்வேறு கண்மாய்கலில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. போடி வட்டத்தில் போடி வருவாய் கிராமத்திற்கு உள்பட்ட அம்மாகுளம் கண்மாய், புதுக்குளம் கண்மாய், மேலச்சொக்கநாதபுரம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட சங்கரப்ப நாயக்கன் கண்மாய் ஆகிய மூன்று கண்மாய்களில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு சார்பில் ரூ. 1 கோடி 2 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீரினைப்பயன்படுத்துவோர் சங்க உறுப்பினர்களிடம் இப்பணி தன்மை குறித்தும், குடிமராமத்து திட்டப்பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்வது குறித்தும் அவர் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வின்போது, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரஅமைப்பு) செயற்பொறியாளர் சுந்தரப்பன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவிப்பொறியாளர் மல்லிகா, வட்டாட்சியர் மணிமாறன் மற்றும் விவசாயிகள் உட்பட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.