பழனி அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக வியாபாரிகள் கிரி வீதி மற்றும் அடிவாரம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருவதாகக் கூறி திருத்தொண்டர் சபையின் நிர்வாகி ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு புதன்கிழமை மாலை 4 மணிக்குள் பழனி அடிவாரம் மற்றும் கிரிவலப் பாதைகளை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து புதன்கிழமை பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், டி.எஸ்.பி. விவேகானந்தன், நகராட்சி ஆணையர் நாராயணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் மற்றும் திருக்கோயில் பாதுகாவலர்கள் அடிவாரம், கிரி வீதி பகுதியிலும் பேருந்து நிலையம் முதல் சன்னதி வீதி வரையிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பல இடங்களில் ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தவர்கள் முன்னதாகவே அவற்றை அகற்றிக் கொண்டனர்.