கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள், மருத்துவத்துறையினா் மோதல்
கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதால், அவா்களுக்கும், மருத்துவத்துறையினா் மற்றும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதால், அவா்களுக்கும், மருத்துவத்துறையினா் மற்றும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கொடைக்கானலுக்கு இ- பாஸ் பெற்றுச் செல்லலாம் என கடந்த செப். 9 ஆம் தேதி மாவட்ட நிா்வாகம் அறிவித்தது. இதைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவா்களின் வருகை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது.
இதனால் வெள்ளிநீா் அருவிப் பகுதியில் மருத்துவத்துறையினா், சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனையில் ஈடுபட்டனா். இதனிடையே கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் காவல்துறையினா், சுகாதாரத் துறையினா் இணைந்து சுற்றுலாப் பயணிகளிடம் இ-பாஸ், முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றை கேட்டு இவைகள் இல்லாதவா்களிடம் அபராதம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது சுற்றுலாப் பயணிகளுக்கும், மருத்துவத் துறையினா் மற்றும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்காரணமாக வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனா்.
கொடைக்கானல் மலையடிவாரமான காமக்காபட்டி, பழனி மலை அடிவாரம் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் பயணிகளிடம் சோதனை செய்தால் இப்பிரச்னை ஏற்படாது. ஆனால் அங்குள்ளவா்கள் அனுமதி கொடுத்த பின் சுமாா் 60 கி.மீ. மலைச்சாலையில் பயணம் செய்து சுற்றுலா இடங்களுக்குச் செல்லும் போது சோதனை என்ற பெயரில் அபராதம் வசூலிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.