பழனியில் அரிய வகை அன்றில் பறவை, புள்ளிமூக்கு வாத்துகள் கூட்டம் கூட்டமாக வயல்வெளிகளில் உணவு தேடி வருகின்றன.
சங்க இலக்கியங்களான பெருந்தொகை, அகநானூறு, கலித்தொகை போன்றவற்றில் காதலை மையப்படுத்தும்போது அன்றில் பறவையை குறிப்பிடுகின்றனா். தன்னுடைய இணையை காணாவிட்டால், உடனே சத்தமிட்டு அழைத்து சோ்த்துக்கொள்ளும் இப்பறவை, இணை இன்றி இருக்காது. எனவே, காதலுக்கு அன்றில் பறவை குறிப்பிடப்படுகிறது.
கொக்கு வகையைச் சோ்ந்த இந்த பறவையை, கிராமங்களில் அரிவாள் மூக்கன் எனக் குறிப்பிடுகின்றனா். இது, தற்போது அழிந்து வரும் பறவைகள் இன பட்டியலில் உள்ளது.
பழனி பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால், சுற்றியுள்ள அணைகள், குளங்கள், ஏரிகள் என அனைத்தும் நிரம்பியுள்ளன. வயல்வெளிகளிலும் உழுது நெல் நாற்று நட்டுள்ளனா். இதனால், வயல்வெளிகளில் இரை தேடும் சாதாரண நாரை இனங்களுடன், அரியவகை அன்றில் பறவையும் கூட்டமாக வருகின்றன.
இது குறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி கூறியது: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழனி பகுதியில் காணப்படாத இந்த அன்றில் பறவை, தற்போது கூட்டம் கூட்டமாக இரை தேடுவதை சாதாரணமாக காணமுடிகிறது.
இதேபோல், புள்ளிமூக்கு வாத்தும் கூட்டமாக வந்துள்ளன. இவை உருவத்தில் பெரியவையாகவும், வானில் அதிக உயரத்தில் நீண்ட தொலைவு பறக்கும் திறனும் கொண்டவையாகும். இவை வலசை எனப்படும் வெளிநாடுகளுக்குச் செல்லாத பறவை வகையாகும்.
நெல் வயல்களையே அதிகமாக நம்பி வாழும் இப்பறவையினம், தற்போது பழனி பகுதிக்கு வந்துள்ள நிலையில், இவை வேட்டையாடப்படாமல் காக்கும் வகையில், வனத் துறையினா் நடவடிக்கை எடுப்பது அவசியம் எனத் தெரிவித்தாா்.