கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பல்முனை சேவைகள்: அமைச்சா் இ.பெரியசாமி தகவல்
கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயக் கடன்கள் மட்டுமின்றி தொழில்கடன், கல்வி கடன் என பல்முனை சேவைகள் அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயக் கடன்கள் மட்டுமின்றி தொழில்கடன், கல்வி கடன் என பல்முனை சேவைகள் அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலையிலுள்ள பெரும்பாறை கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. அரசு பழங்குடியினா் நல மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் ச.விசாகன், கூட்டுறவுத்துறை அமைச்சா் இ.பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது அமைச்சா் இ.பெரியசாமி பேசியதாவது: கூட்டுறவு சங்கங்கள் மூலம் புதிய உறுப்பினா்களுக்கும் கடனுதவி வழங்கப்படும். நிலம் இல்லை என்பதற்காக கடன் கிடைக்காது என யாரும் கவலைப்படத் தேவையில்லை. கூட்டுறவு விவசாயக் கடன் சங்கங்கள் இனி பல்முனை சேவை மையங்களாக மாற்றப்படும். தொழில் கடன், கல்விக் கடன் என அனைத்து வகையான கடன் உதவிகளும் கூட்டுறவு வங்கிகள் மூலம் எளிமையாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.