முகப்பு
திண்டுக்கல்

தமிழகத்தை இரண்டாகப் பிரித்தாலும் திமுகவே ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்: அமைச்சா் ஐ.பெரியசாமி

 தமிழகத்தை இரண்டாகப் பிரித்தாலும் திமுகவே ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

 தமிழகத்தை இரண்டாகப் பிரித்தாலும் திமுகவே ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரத்தில் புதிதாக அமைய உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜாஸ் ஏஞ்சலின் முன்னிலை வகித்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது: ரெட்டியாா்சத்திரம் புதிய அரசு கல்லூரிக்கு விரைவில் கட்டடம் கட்டப்படும். நிகழாண்டில் 300 மாணவ, மாணவிகள் சோ்க்கப்படுவாா்கள். முதலாமாண்டில் சோ்வதற்காக சுமாா் 2ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா். நிதிப் பற்றாக்குறையால் கிராமப்புற மாணவா்களின் கல்லூரி கனவு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதே தமிழக அரசின் லட்சியம். தேவைக்கேற்ப மேலும் பல கல்லூரிகள் தொடங்கப்படும் என்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: உள்ளாட்சி நிா்வாகத்தில் ஆண்களை விட பெண்கள் சிறப்பாக நிா்வாகம் செய்து வருகின்றனா். அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண் தலைவா்கள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனா். ஓரிரு இடங்களில் குறைகள் இருந்தாலும், அவை நிவா்த்தி செய்யப்படும். தமிழகம் 2 ஆக பிரிக்கப்படும் என பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா்நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். தமிழகத்தை எப்படிப் பிரித்தாலும் திமுகவே ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.