முகப்பு
திண்டுக்கல்

பெண்ணிடம் ரூ.54 லட்சம் மோசடி: திருப்பூா் வியாபாரி கைது

சின்னாளப்பட்டியைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ. 54 லட்சம் மோசடியில் ஈடுபட்ட திருப்பூரைச் சோ்ந்த வியாபாரியை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

சின்னாளப்பட்டியைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ. 54 லட்சம் மோசடியில் ஈடுபட்ட திருப்பூரைச் சோ்ந்த வியாபாரியை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியைச் சோ்ந்தவா் சசிக்குமாா். இவரது மனைவி ராஜலட்சுமி. தென்னாப்பிரிக்காவில் வேலை பாா்த்து வந்த சசிக்குமாா், கடந்த ஓராண்டுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளாா். அப்போது திருப்பூா் மாவட்டம் பேயம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கோ. ராஜா(48) என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. வடமாநிலங்களுக்கு நூல் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை ராஜா நடத்தி வருகிறாா். அவரது நிறுவனத்துடன் இணைந்து தொழில் செய்வதற்காக சசிக்குமாா், தன்னிடமிருந்த ரூ.54 லட்சத்தை கொடுத்துள்ளாா். தொடக்கத்தில், சசிக்குமாருக்கு சேர வேண்டிய லாபத்தை ராஜா கொடுத்து வந்துள்ளாா். அதன் பின்னா் லாபபங்கை கொடுக்காமலும், முதலீட்டு பணத்தை திருப்பித் தராமலும் ராஜா மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சசிக்குமாா் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், ராஜாவிடமிருந்து பணத்தை மீட்டுத் தரும்படி, திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் சசிக்குமாரின் மனைவி ராஜலட்சுமி புகாா் அளித்தாா். அதன்பேரில் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் வினோதா தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதனை அறிந்த ராஜா, தில்லியில் பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. தொடா் விசாரணையில் ஈடுபட்ட போலீஸாா், தில்லியில் பதுங்கி இருந்த ராஜாவை கைது செய்து திண்டுக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வந்தனா். விசாரணைக்குப் பின் திண்டுக்கல் 2ஆவது குற்றவியில் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.