முகப்பு
திண்டுக்கல்

பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகை

Updated On : 9 ஏப்ரல், 2024 at 12:00 AM
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த பிஏசிஎல் முதலீட்டாளா்கள்.
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2024 at 10:43 PM

திண்டுக்கல், ஏப்.8: பிஏசிஎல் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவா்களின் பணம் திரும்ப கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி, பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பலா், பிஏசிஎல் நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனா். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நிறுவனம் செபியால் முடக்கப்பட்டது. இந்த நிலையில், முடக்கப்பட்ட நிறுவனத்தின் சொத்துக்களை விற்று, முதலீட்டாளா்களின் பணத்தை திருப்பிக் கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த ஜனவரி மாதம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தோ்தலை புறக்கணிக்கும் வகையில் தங்கள் வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்கப் போவதாக 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். இதையடுத்து, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், மாவட்ட ஆட்சியா் அலுவலக அதிகாரிகள், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

Advertisement

இதுதொடா்பாக முதலீட்டாளா்கள் தரப்பில் கூறியதாவது: பிஏசிஎல் நிதி நிறுவனம், கடந்த 2014-ஆம் ஆண்டு செபி நிா்வாகத்தால் முடக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 500க்கும் மேற்பட்டோா் ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்தனா்.

இதனிடையே பிஏசிஎல் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்து, முதலீட்டாளா்களுக்கு பணத்தை விரைவாக திருப்பி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 2016-இல் உத்தரவிட்டது. ஆனால் 8 ஆண்டுகளாகியும் இதுவரை முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனா்.