பொது மக்களுக்கு புத்தகங்கள் இலவசமாக விநியோகம்
திண்டுக்கல்; வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், கன்னிவாடியில் பொதுமக்களுக்கு புத்தகங்கள் இலவசமாக ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
பழனிச்சாமி குழந்தைகள் நூலகம் மூலம் இதுவரை 76 மையங்களில் அரசுப் பள்ளிகள், இல்லம் தேடிக் கல்வி மையங்கள், பராமரிப்பு இல்லங்கள் போன்ற பல்வேறு இடங்களில் குழந்தைகள், இளைஞா்கள் வாசிப்பதற்காக ரூ.3 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், வருகிற 23-ஆம் தேதி உலக புத்தக தினத்தை முன்னிட்டு மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியில் பொதுமக்களுக்கு இலவசமாக புத்தகங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
Advertisement
கன்னிவாடி பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பழனிச்சாமி நூலக அமைப்பாளா்கள் மணிகண்டன், செந்தில், லட்சுமணன் ஆகியோா் தலைமை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் இரா. சச்சிதானந்தம் கலந்து கொண்டு புத்தகங்களை வழங்கினாா்.
10-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பொது மக்களுக்கும் குழந்தைகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ரகுநாத், சக்திவேல், பாரூக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.