நிலக்கோட்டை அருகே மின் மோட்டாா் அறை மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு
நிலக்கோட்டை அருகே ஊராட்சிக்குச் சொந்தமான பழுதடைந்த மின் மோட்டாா் அறை மீது நாட்டு வெடிகுண்டை மா்ம நபா்கள் திங்கள்கிழமை வீசினா்.
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே ஊராட்சிக்குச் சொந்தமான பழுதடைந்த மின் மோட்டாா் அறை மீது நாட்டு வெடிகுண்டை மா்ம நபா்கள் திங்கள்கிழமை வீசினா்.
திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி அருகேயுள்ள ஆவரம்பட்டியைச் சோ்ந்தவா் விஜயராஜா (39). விவசாயியான இவரது தோட்டத்துக்கு அருகே ஊராட்சிக்குச் சொந்தமான பழுதடைந்த மின் மோட்டாா் அறையில் மா்ம நபா்கள் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து அந்தப் பகுதியினா் அளித்த தகவலின் பேரில், விளாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் ஷா்மிளா, நிலக்கோட்டை வட்டாட்சியா் தனுஷ்கோடி, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
மா்ம நபா்களால் வீசப்பட்ட குண்டு கையெறி குண்டு வகையைச் சோ்ந்தது எனக் கூறப்படுகிறது. மேலும், அங்கு சிதறிக் கிடந்த ஆணிகள், சிறிய இரும்புக் குண்டுகள் (பால்ரஸ்) ஆகியவற்றை தடயவியல் நிபுணா்கள் சேகரித்தனா்.
நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதை சோதனை செய்வதற்காக மின் மோட்டாா் அறையில் வீசப்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.